Saturday, January 10, 2009

கிளிநொச்சியை புலிகள் கைவிட காரணம் என்ன?

முல்லைத்தீவை பாதுகாக்க புலிகள் கிளிநொச்சியை கைவிட்டார்களா? அனைவர் மத்தியிலும் தற்போது எழுப்பப்படும் மிகப் பெரும் கேள்வி இதுவாகும். கிளிநொச்சிக்கான போரில் படையினர் தொடர்ந்தும் பேரிழப்புகளை சந்தித்து வந்தபோது புலிகள் திடீரென கிளிநொச்சியை கைவிட ஏன் தீர்மானித்தார்கள்? கிளிநொச்சியை மையப்படுத்தி புலிகள் படையினருக்கு தொடர்ச்சியாக பலத்த இழப்புகளை ஏற்படுத்தி வந்தபோது...
முடிந்த வரை இழப்புக்களைக் குறைத்து இந்தப் படை நடவடிக்கையை எப்படி முன்னெடுப்பதென படைத்தரப்பு தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்த நிலையில் பரந்தனையும் கிளிநொச்சியையும் கைவிட புலிகள் தீர்மானித்தனர். இதையடுத்து இன்று கிளிநொச்சி படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளது. கிளிநொச்சிக்கான போர் உண்மையிலேயே படையினரின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே இருந்தது. பூநகரி நோக்கிய முன்நகர்வு போலவே கிளிநொச்சிக்கான போருமிருக்குமெனப் படைத்தரப்பு கருதியிருந்தது. ஆனால் நிலைமை தலைகீழாக இருந்ததை கிளிநொச்சிக்கான சமரின்போது படையினர் நன்குணர்த்திருந்தனர். "ஏ9' வீதியை முழுமையாகக் கைப்பற்றினால் மட்டுமே பூநகரியை கைப்பற்றியதற்கான பலன் கிடைக்குமென்பதை படையினர் பூநகரிக்கு வந்த பின்னரே உணர்ந்தனர். பூநகரியை படையினர் கைப்பற்றி மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையிலும் சங்குப்பிட்டி கேரதீவு ஊடான கடல் பாதையை படையினரால் இன்று வரை திறக்க முடியவில்லை. பரந்தனுக்கு வடக்கே ஆனையிறவு முதல் கிளாலி வரையான பகுதிகள் புலிகள் வசம் இருக்கும் வரை பூநகரி ஊடாக சங்குப்பிட்டி-கேரதீவு கடல் பாதையை திறக்க முடியாதென்பதை படையினர் உணர்ந்தனர். இதனால்தான் பூநகரிக்கான சமரை விட பரந்தன் மற்றும் கிளிநொச்சிக்கான சமரில் புலிகள் மிகுந்த அக்கறை காட்டினர். ஆனால் பூநகரியை கைப்பற்றியும் அதனால் பிரயாணம் எதுவும ஏற்படாதபோதும் பூநகரியைக் கைப்பற்றியதன் மூலம படையினரால் பரந்தனுக்கு வர முடிந்தது. பூநகரி பரந்தன் வீதியூடாக முன்நகர்ந்த படையினர் பரந்தன் நதியை வந்தடைந்ததாலேயே படையினரால் இன்று கிளிநொச்சியைக் கைப்பற்ற முடிந்தது. இதனால்தான் கிளிநொச்சிக்கான போரில் படையினர் பேரிழப்புகளைச் சந்தித்தபோது பரந்தனைக் கைப்பற்றும் முயற்சியை படைத்தரப்பு தீவிரப்படுத்தியிருந்தது. கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக நேரடிச் சமரில் ஈடுபடுவது பேரிழப்புகளை ஏற்படுத்தி வந்ததால் கிளிநொச்சி முற்றுகையை சற்று தளர்த்திய படைத்தரப்பு பூநகரி பரந்தன் வீதியூடான முன்நகர்வு முயற்சியை தீவிரப்படுத்தியிருந்தது. கிளிநொச்சிக்கான முற்றுகைப் போரில் படையினர் கிளிநொச்சியின் தென்பகுதியிலிருந்தும் கிளிநொச்சியின் மேற்குப் புறத்திலிருந்தும் கடும் தாக்குதலைத் தொடுத்து வந்தனர். கிளிநொச்சியை கைப்பற்றுவது படையினருக்கு பெரும் கௌரவப் பிரச்சினையாகவும் அதேநேரம் கிளிநொச்சியை கைப்பற்றிவிட்டால் அது புலிகளுக்கெதிரான பிரசாரப் போரை முன்னெடுக்க மிகவும் உதவுமெனவும் அரசு கருதியது. ஆனால் கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதை புலிகள் மிகத் தீவிரமாக எதிர்த்து வந்தனர். சில நகரங்கள் விடுதலைப் போராட்டத்தினைத் தீர்மானிப்பதில்லையென்றாலும் கிளிநொச்சியை இழப்பதென்பது புலிகளுக்கும் கௌரவப் பிரச்சினையாக இருந்ததுடன், வன்னிப்போர் இரு பிரதான நகரங்களை மையமாக வைத்த மேற்கொள்ளப்பட்டு வந்ததால் கிளிநொச்சி நகரின் வீழ்ச்சியுடன் போர் முனையும் முல்லைத்தீவு நோக்கி நகர்ந்து விடுமென்பதால் கிளிநொச்சியை இழப்பதென்பது முல்லைத்தீவுக்கான போர் முனையை திறப்பதாயிருக்குமென்பதையும் புலிகளும் நன்குணர்ந்திருந்தனர். இதனால் தான் கிளிநொச்சியின் வீழ்ச்சியுடன், இதுவரை "ஏ9' வீதியின் மேற்குப் புறம் நடைபெற்ற யுத்தம் இனி "ஏ9' வீதியின் கிழக்குப் புறத்திற்கு மாற்றம் பெற்றுள்ளது. கிளிநொச்சிக்கான போரில் எதிர்பாராதளவிற்கு படையினர் பேரிழப்புகளைச் சந்தித்தனர். பல நூற்றுக்கணக்கான படையினர் குறிப்பிட்ட சில நாட்களில் கொல்லப்பட்டனர். மிகப்பெருந்தொகையான படையினர் படுகாயமடைய ஆயிரக்கணக்கானவர்கள் குறிப்பிட்ட நாட்களில் களமுனைகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இது படையினருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. கிளிநொச்சி மற்றும் பரந்தனை நோக்கி மேலும் மேலும் முன்னேற முற்பட்டபோது இழப்புகள் கூடினவே தவிர முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து புலிகளின் கவனத்தை பெருமளவில் திசை திருப்ப வேண்டிய அவசர தேவை படையினருக்கு ஏற்பட்டது. வன்னிப் போரில் ஆரம்பம் முதலே மணலாறு களமுனை மிகவும் மந்தமாகவேயிருந்தது. "ஏ9' வீதியின் மேற்குப் புறத்திலேயே படையினரின் முழுக் கவனமும் இருந்ததால் முல்லைத்தீவு முனையில் புலிகளுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படவில்லை. ஆனால் கிளிநொச்சிப் போரில் படையினருக்கு பெரும் நெருக்கடி ஏற்படவே முல்லைத்தீவு நோக்கிய நகர்வைத் தீவிரப்படுத்தி புலிகளுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்க படைத் தரப்பு தீர்மானித்தது. இந்த நிலையில், கிளிநொச்சியைவிட புலிகளுக்கு முல்லைத்தீவு முனையில் படையினரின் முன்நகர்வுகளைத் தடுத்து நிறுத்த வண்டிய அவசர மற்றும் அவசிய தேவையுமிருந்தது. அளம்பில் பகுதியினூடாக படையினர் முள்ளியவளையை அடைந்ததுடன் மாங்குளம் முல்லைத்தீவு வீதியை முழுமையாகக் கைப்பற்றும் தீவிர முயற்சியிலும் படையினர் இறங்கினர். அதேநேரம் முள்ளியவளை மற்றும் தண்ணீரூற்றிலிருந்து முல்லைத்தீவு நோக்கிய பாரிய நகர்வுகளை மேற்கொண்டபோது புலிகள் கடும் பதிலடி கொடுக்கவே படையினருக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து முல்லைத்தீவு நோக்கிய நகர்வைவிட முள்ளியவளையிலிருந்து நேரே வடக்காக முன்நகர்ந்து அடர்ந்த காடுகளினூடாக புதுக்குடியிருப்பு நோக்கிய நகர்வுக்கு படையினர் முற்பட்டனர். புதுக்குடியிருப்புக்குச் சென்ற பின்னர் கிழக்கே திரும்பி கரையோரத்தை நோக்கி நகர்ந்தால் முல்லைத்தீவை மோதல் எதுவுமின்றி கைப்பற்றிவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது. அதேநேரம் புதுக்குடியிருப்பு நோக்கிய நகர்வைத் தீவிரப்படுத்தும்போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து தங்கள் கவனத்தை முல்லைத்தீவு நோக்கி திசைதிருப்புவரெனவும் படைத்தரப்பு கருதியது. இந்த நிலையிலேயே கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளிலிருந்து விலக புலிகள் தீர்மானித்திருக்கலாமெனவும் கருதப்படுகிறது. இதனால்தான், படையினர் பேரிழப்புகளை சந்தித்து வந்த கிளிநொச்சி மற்றும் பரந்தன் களமுனைகளை கைவிட்டு புலிகள் "ஏ9' வீதிக்கு கிழக்கே தங்கள் முழுக் கவனத்தையும் திரை திரும்பியிருக்கலாமெனக் கருதப்படுகிறது. புலிகளின் இந்தப் பின்நகர்வு படையினருக்குப் பெரும் வாய்ப்பாகிவிட்டது. கிளிநொச்சிக்கான போரில் தொடர்ந்தும் படையினர் பலத்த இழப்புகளைச் சந்தித்து வந்தபோது வன்னிச் சமர் குறித்து தெற்கில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. கிளிநொச்சி சமர், இதுவரை வன்னியில் நடைபெற்ற சமர்களை விட படையினருக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தி விடுமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. புலிகள் அண்மையில் ஆயுதக் கப்பல்களில் பெருமளவு போர்த் தளபாடங்களை தரையிறக்கியிருந்தனர். படையினரும் அதனை ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். கிளிநொச்சி மற்றும் பரந்தன் சமர்க்களத்திலும் புலிகள் ஆட்லறி ஷெல்களையும் மோட்டார் குண்டுகளையும் மழைபோல் பொழிந்து படையினருக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தியபோது, புலிகளின் ஆயுதக் கப்பல்கள் முல்லைத்தீவு கடற்பரப்புக்கு வந்ததை படையினர் ஒப்புக் கொள்ள வேண்டிய நிலையேற்பட்டது. கிளிநொச்சி பரந்தன் களமுனை இப்படியிருக்கையில் புலிகள் ஏன் அங்கிருந்து விலகத் தீர்மானித்தார்கள் என்ற கேள்வி ஆய்வாளர்களைக் குடைகிறது. இவ்விரு முனைகளிலிருந்தும் புலிகள் விலகத் தீர்மானித்தபோது, படையினர் பரந்தனை அல்லது கிளிநொச்சியை பிடித்துவிடும் நிலையிலிருக்கவில்லை. கிளிநொச்சிக்கு தெற்கே சுமார் ஏழு கிலோமீற்றர் தூரத்தில் "ஏ9' வீதியில் இரணைமடுவுக்கு அப்பாலும் கிளிநொச்சிக்கு மேற்கே சுமார் ஆறு கிலோமீற்றர் தூரத்தில் அடம்பன் பகுதியிலும் பரந்தனுக்கு மேற்கே, பூநகரி-பரந்தன் வீதியில் சுமார் ஆறு கிலோமீற்றர் தூரத்திலும் படையினர் நிலைகொண்டிருந்தனர். பூநகரி பரந்தன் வீதிக்கு வடக்கே குடாக் கடலோரத்திலிருந்து இரணைமடுவரை பாரிய மண் அணை எழுப்பி படையினரின் முன்நகர்வு முயற்சிகளுக்கு மிகக் கடும் பதிலடி கொடுத்தவாறு படையினரை அந்தந்த இடங்களிலிருந்து சிறிது தூரம் கூட முன்நகர அனுமதிக்காது தடுத்து வந்த நிலையிலேயே, கடந்த செவ்வாய்க்கிழமை (30 ஆம் திகதி) பரந்தன், கிளிநொச்சி களமுனைகளிலிருந்து விலகுவதென புலிகள் திடீர் முடிவெடுத்திருந்தனர். 30 ஆம் திகதி அதிகாலை இந்த முனைகளில் படையினர் வழமை போல் கடும் தாக்குதலைத் தொடுத்தபோது புலிகள் கடும் பதில் தாக்குதலைத் தொடுக்கவில்லை. அவர்களது பதில் தாக்குதல்களில் உக்கிரமில்லை. பலவீனமாகவேயிருந்தது. இதையடுத்து படையினர் கடும் தாக்குதலை நடத்தியவாறு அனைத்து முனைகளிலும் முன்னேறத் தொடங்கினர். புலிகளின் பதில் தாக்குதலில் வலு இல்லாததால் பூநகரி பரந்தன் வீதியூடாக பரந்தன் சந்தியை சென்றடையத் தீர்மானித்தனர். கிளிநொச்சி நோக்கிய நகர்வில் மிகக் கவனமாயிருந்தனர். புலிகளின் இந்தப் பின்நகர்வு படையினருக்கு ஆச்சரியமாயிருந்தது. அதேநேரம் மிகவும் முன்னெச்ரிக்கையுடன் நகர்ந்தனர். புலிகள் எங்காவது தங்களைப் பொறிகளுக்குள் சிக்க வைத்து விடுவார்களா என்ற பெரும் சந்தேகமிருந்ததால் முதலில் பரந்தன் சந்தியை கைப்பற்றத் தீர்மானித்தனர். கிளிநொச்சி நோக்கிய நகர்வின்போது புலிகள் தந்திரமான நடவடிக்கை மூலம் தங்களைச் சிக்கவைத்து விடலாமென்பதால், "ஏ9' வீதியில் பரந்தன் சந்தியை சென்றடைந்துவிட்டால் பின்னர் புலிகளின் தந்திரங்களை முறியடித்தவாறு பரந்தனிலிருந்து கிளிநொச்சி நோக்கி முன்நகரலாமென படையினர் திட்டமிட்டனர். கிளிநொச்சியைவிட பரந்தன் மிக முக்கியமாயிருந்தது, பரந்தன் சந்தியை கைப்பற்றுவதன் மூலம் நான்கு முக்கிய பகுதிகளுக்கான விநியோக மார்க்கங்களையும் கைப்பற்ற முடியும் அல்லது தடுக்க முடியுமென்பதையும் அறிந்திருந்தனர். பரந்தன் சந்திக்கு தெற்கே "ஏ9' வீதியில் கிளிநொச்சியும், பரந்தன் சந்திக்கு கிழக்கே "ஏ35' வீதியில் (பரந்தன் முல்லைத்தீவு வீதி) முரசுமோட்டையும் பரந்தன் சந்திக்கு வடக்கே "ஏ9' வீதியில் ஆனையிறவும், பரந்தன் சந்திக்கு மேற்கே "பி 69' வீதியில் (பூநகரி பரந்தன் வீதி) பூநகரியும் உள்ளன. பரந்தன் சந்தியை கைப்பற்ற முன்னர் இந்தச் சந்தியூடாகவே நான்கு திசையிலுமான விநியோகங்களையும் போக்குவரத்தையும் புலிகள் மேற்கொண்டிருந்தனர். இந்தச் சந்தியை படையினர் கைப்பற்றியதன் மூலம் இதனூடாக புலிகள் ஆனையிறவு முதல் முகமாலை வரை மேற்கொண்டு வந்த விநியோகங்கள் தடைப்பட்டு விட்டன. முகமாலை, மற்றும் கிளாலிக்கான விநியோகங்களை புலிகள் இனி முல்லைத்தீவு கரையோரத்தால், வடமராட்சி கிழக்கின் செம்பியன்பற்று ஊடாகவே மேற்கொள்ளமுடியும். அதுவும், படையினர் பரந்தன் சந்தியிலிருந்து ஆனையிறவு நோக்கியும் கிளாலி மற்றும் முகமாலை பகுதிகளிலிருந்து பளையை நோக்கியும் முன்நகர்ந்தாலும் பாரிய நெருக்கடிகளுக்குக்குள்ளாகிவிடுமென்ற படையினர் கருதுகின்றனர். பரந்தனையும் கிளிநொச்சியையும் கைப்பற்றிய படையினர் அடுத்து எந்த முனையில் நகர முற்படுவரென்ற கேள்வி எழுகிறது. பரந்தன்-முல்லைத்தீவு வீதியூடாக (ஏ35) முரசுமோட்டை நோக்கி முன்னேற முயல்வார்களா அல்லது "ஏ9' வீதியூடாக ஆனையிறவு நோக்கி முன்னேற முயல்வார்களா என்ற கேள்வி எழுகிறது. முல்லைத்தீவு புலிகளின் இறுதிக் கோட்டை என்பதால் முல்லைத்தீவில் புலிகளைச் சந்திக்க முன்னர் ஏனைய அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றிவிடவே படையினர் முயல்வர். இதனால் படையினர் முல்லைத்தீவு நோக்கி நகர்வது போல் காண்பித்தவாறு, பரந்தன் முதல் முகமாலை வரையான மிகுதி "ஏ9' வீதியையும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுவர். படையினருக்கு பெருமளவு ஆட்பற்றாக்குறை நிலவுவதால் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள பெருமளவு படையினரை வன்னிக்குள் களமிறக்க வேண்டிய அவசர தேவை உள்ளது. அதனால் பரந்தனுக்கும் குடாநாட்டுக்குமிடையிலான தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் வடமராட்சி கிழக்கையும் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதன் மூலம் நாகர்கோவில் முதல் தென்கிழக்கே சுண்டிக்குளம் வரையான மிக நீண்ட (பலமைல்) கடற்பரப்பையும் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து கடற்புலிகளை முல்லைத்தீவில் மிகக் குறைந்தளவு கடற்பரப்புக்குள் உடனடியாக முடக்கி விடவும் படையினர் முனைவர். இதனால் படையினரின் அடுத்த நகர்வு பரந்தனிலிருந்து ஆனையிறவு நோக்கியும் கிளாலி மற்றும் முகமாலையிலிருந்து பளையை நோக்கியதாகவுமேயிருக்கும். இவ்வாறானதொரு நகர்வு வெற்றி பெற்றால் புலிகளை பரந்தன்-முல்லைத்தீவு வீதி முதல் (ஏ35வீதி) மாங்குளம்-முல்லைத்தீவு வீதி வரையான (ஏ34வீதி) சுமார் 40 கிலோமீற்றர் நீளமும் 40 கிலோமீற்றர் அகலமும் கொண்ட பிரதேசத்தினுள் முடக்கிவிட்டு பின்னர் முல்லைத்தீவு நோக்கி தெற்குப்புறத்திலிருந்தும் மேற்குப் புறத்திலிருந்தும் முன்னேறி கைப்பற்றிவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது. அதேநேரம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மிகவும் குறுகிவிட்டால் புலிகளை அந்தப் பகுதிக்குள் சுலபமாக முடக்கிவிட முடியுமெனவும் படையினர் கருதுகின்றனர். தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்குள்ளிருக்கும் மூன்று இலட்த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களையும் முதலில் அங்கிருந்து வெளியேற்றுவதிலும் அரசும் படைத்தரப்பும் தீவிர கவனம் செலுத்தும். இதனால், படையினர் அடுத்து "ஏ9' வீதியூடாக நகர்ந்து பரந்தனுக்கும் முகமாலைக்கும் இடையிலான பகுதிகளைக் கைப்பற்றுவதில் தீவிர கவனம் செலுத்துவர். இதேவேளை, பரந்தன் சந்தியை கைவிட்டதன் மூலம் இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என்பதை புலிகளும் நன்கறிவர். பரந்தனும் கிளிநொச்சியும் படையினர் வசமாகிவிட்டால் யுத்தமுனை உடனடியாக முல்லைத்தீவை நோக்கி திரும்பிவிடுமென்பதையும் புலிகள் நன்கறிவர். பரந்தன் சந்தி தங்கள் வசமானதும், பரந்தன் முதல் முகமாலை வரையான பகுதிகளைக் கைப்பற்ற முயல்வதென்பதுடன் அதன் மூலம் வடமராட்சி கிழக்கும் முழுமையாக படையினர் வசமாகிவிடுமென்பதையும் புலிகள் நன்கறிவர். அண்மையில் கூட கப்பல்களில் பெருமளவு ஆயுதங்களையும் போர்த்தளபாடங்களையும் அவர்கள் தருவித்துள்ளனர். கிளிநொச்சி மற்றும் பரந்தனிலிருந்து பின் நகர்ந்தபோது கூட அவர்கள் தங்கள் வளங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாது பின்னகர்த்தியுள்ளனர். புலிகளின் பிரதேசங்கள் நன்கு குறுகிவிட்டபோதும் மூன்று இலட்த்திற்கும் மேற்பட்ட வன்னி மக்களும் அவர்களுடனேயே இருக்கின்றனர். புலிகள் வழங்கிய ஏதோ நம்பிக்கையில் தான் அந்த மக்கள் அவர்களுடன் இருக்கின்றனர். தற்போதைய நிலையில் வலுக்கட்டாயமாக அந்த மக்களைப் புலிகள் தடுத்து வைத்திருக்கக்கூடிய சாத்தியமில்லை. தங்கள் பகுதிகளை நோக்கி யுத்தம் திசை திரும்பியுள்ளதையும் அந்த மக்கள் நன்கறிந்தும் இதுவரை அவர்கள் புலிகளுடன் முரண்பட்டு, புலிகள் படைகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூட எவரும் கூறவில்லை. மோதி அங்கிருந்து வெளியேற முயற்சிப்பதாகக்கூட எதுவித தகவல்களும் வெளிவரவில்லை. இவ்வாறானதொரு நிலையில் புலிகள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி உலகெங்கும் எழுப்பப்படுகின்றது. புலிகளை கடைசிப் பொறிக்குள் தள்ளி அவர்களை சரணடையச் செய்ய அல்லது அவர்களை அழித்துவிட வேண்டுமென இலங்கை அரசும் இனவாதிகளும் முயல்கின்றனர். வன்னிப்போரில் இலங்கை அரசுக்கும் படையினருக்கும் அனைத்து வகையிலும் உதவும் இந்தியா தமிழக மக்களின் உணர்வுகளைக்கூட மதிக்கத் தவறியுள்ளதுடன் இலங்கையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த எந்தவிதத்திலும் முன்வரவில்லை. இலங்கைப் படையினருக்கும் இலங்கையரசுக்கும் முழுஅளவில் இராணுவ உதவிகளை வழங்கும் இந்தியா, போர் நிறுத்தத்தை வலியுறுத்த முற்றாக மறுத்ததன் மூலம் தான் எந்தப் பக்கத்தில் நிற்கிறதென்பதை முழு உலகிற்கும் காண்பித்துவிட்டது. இதனால் வன்னியிலும் அதற்கு வெளியிலும் ஏற்படப்போகும் அழிவுகளுக்கான பொறுப்பை இந்தியாவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் வன்னிப்போரில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுமானால் அப்போது எதனையும் கோரக்கூடிய உரிமையையும் அது இழந்துவிட்டது. முற்றுமுழுதாக இந்திய அரசு ஈழத் தமிழர்களையும் கைவிட்டதன் மூலம் தனது வரலாற்றில் அதுமிகப்பெரும் கறையை ஏற்படுத்தப் போகிறது. இந்த நிலையில் வன்னியில் அடுத்த கட்ட படைநகர்வுகளை ஆரம்பிக்க படையினர் முயலக்கூடும். ஆனாலும் அவர்களுக்குப் புலிகளின் படைபலம் பற்றியும் தெரியும். பரந்தனையும் கிளிநொச்சியையும் புலிகள் ஏன் கைவிட்டார்கள் என்ற கேள்வியும் அவர்கள் மத்தியில் எழுகிறது. வன்னிக்குள் சகல பகுதிகளிலும் பரந்துவிரிந்து விட்ட நிலையில் முல்லைத்தீவுக்கான கடைசிப்போரையும் எப்போது ஆரம்பிப்பதென்பது குறித்து படைத்தரப்பும் யோசிக்கின்றது. புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பதை படையினரால் ஊகிக்க முடியாதுள்ளது. முல்லைத்தீவு நோக்கிய பாரிய படைநகர்வுக்கு எதிராக புலிகள் மிகத் தீவிரமாக எதிர்சமர் புரிவரென்பதால் பெருமளவு படையினர் கொல்லப்படுவார்கள் என்றும் அவர்கள் ஊகிக்கின்றனர். அதேநேரம் கிளிநொச்சி மற்றும் பரந்தனுக்கான போரில் பாரிய மண் அணைகளை அமைத்தது போன்று முல்லைத்தீவு களமுனைவில் புலிகள் பாதுகாப்பு அரண்கள் எதனையும் அமைக்கவில்லை. மிகக் குறுகிய பிரதேசத்திற்குள் அவர்களை முடக்கிவிட்டதால் மிகச் சுலபமாக அவர்களை முறியடித்து வெற்றி கொண்டுவிட முடியும் எனவும் படைத்தரப்பு எண்ணுகிறது. தற்போதைய நிலையில் இனிவரும் ஒவ்வொரு நாட்களும் மிக முக்கியமாக இருக்கப்போகின்றது. இறுதிப் போரை தொடுக்கப் படையினர் முயலும் போது புலிகள் எங்கிருந்து தமது பதில் நடைவடிக்கையை எப்படி ஆரம்பிப்பர் என்பதை எவராலும் ஊகிக்க முடியாதிருக்கிறது. அவர்களும் அங்குள்ள மக்களும் நம்பிக்கையுடன் இருப்பது தெரிகிறது. பரந்தன் மற்றும் கிளிநொச்சியை அவர்கள் திடீரென கைவிட்டபோது வேறு சில நகர்வுகளை அவர்கள் மேற்கொள்ளக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருப்பது போல் இலங்கை அரசிடமும் படையினர் மத்தியிலுமுள்ளது. இதனால் வன்னியில் இறுதிப் போரில் எவரை எவர் வெல்லுவார் என்பதை அறிய முழு உலகமும் காத்திருக்கின்றது.

விதுரன்

No comments:

Post a Comment