Sunday, January 11, 2009

தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக பிரகடனப்படுத்துவோம்.

"உலகெங்கும் தமிழன் பரந்து வாழ்ந்தாலும்.. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியுள்ளது..." - மேதகு வே.பிரபாகரன் அவர்கள்....

தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என பிரகடனப்படுத்துவோம்
தைப் புத்தாண்டில் தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்!
ஒரு இனம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு. தனது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம் செய்து வைக்கும் காரணியாகின்றது.
அந்த வகையில் உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதன்நிலை பெறும் தமிழ் மொழி தமிழர் இனம் தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுநர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.
தமிழ் வளர்த்த மூன்று சங்கங்களின் சுவடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படி ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட குமரிக்கோட்டின் நடுவரைக் கோடு இலங்கை எங்கின்ற தேசத்தை நடுவனாகக் கொண்டு தமிழர்களின் பூர்வீகத் தாயகம் உலக பந்தில் ஒரு தேசமாக தன்னை நிலை நிறுத்தியிருந்தது.
குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர் இனம் தன் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தன் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.
இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியான மூத்த தமிழ்க்குடி மொழி வழியேகி வாய்வியல் கூறுகளுக்கும் ஆண்டுக்களிப்பீடுகளை தொடக்கமாகவும் நிர்ணயம் செய்து கொண்டனர் எனக்கூறும் இவர்கள், தமிழர்கள் என்னும் இந்த சாதியினர் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப காலக்கணிப்பீடுகளை மதிப்பீடு செய்து அதனூடாக கண்டறிந்த பெறுபேறுகளுக்கு அமைவாக தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள்.
ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாகத் அன்றே பகுத்து வைத்தார்கள். 'வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, சாமம்' என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்.
ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள். அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று பண்டைக் காலத்தில் கணக்கிட்ட தமிழர்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும் எனவும் நிறுவி தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் - (தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் - (வைகாசி - ஆனி தங்களுக்குரியது)
4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி - (புரட்டாசி - ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி - (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)
காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப்படுத்திக்கொண்டான்.
பொங்கல் திருநாளைத் தமிழர்கள் 'புதுநாள்' என்று அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது - போகியது - போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.
தமிழ் ஆண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.
ஒரு இனத்தின் அடையாளம் இன்னோர் இனத்தின் அபார வளர்ச்சியினால் அழிக்கப்படும் என்ற தத்துவக்கோட்பாட்டுக்கு அமைவாகவோ என்னவோ பின்னாளில் வந்த இனங்களின் நாகரீக ஆளுகைக்கு அடிமையாகிய தமிழர் இனம் தனது வாய்வின் கணீப்பீட்டு நாளை புறம் தள்ளி மாற்றார் கணிப்பீடுகளை தனது அடையாளமாக மாற்றிக் கொண்டதன் விளைவாக தமிழர் புத்தாண்டு புறம் தள்ளப்பட்டது.
எனினும் காலச்சுழற்சியின் வேகத்துக்குள் தன்னினக் கருவைச் சுமக்கும் இனம் தனக்கான தாயகத்தை உருவாக்கியுள்ள சூழலில், தனது தொன்மை மிக்க அடையாளங்களையும் நிலைநாட்ட முற்படுதல் அவசியமாகின்றது.
தனித்துவமான மொழியைப் பேசுகின்ற தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள தமக்கு என பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள் ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலக சட்டம் வரையறை செய்கின்றது.
இதை கவனத்தில் எடுத்த ஈழத்தமிழர்கள் "இந்த ஆண்டின் தைப்பொங்கல் நாளான ஜனவரி மாதம் 14 ஆம் நாளினை தமது புத்தாண்டுத் நாளாகவும் இருள் அகன்று இழந்த நிலப்பரப்புக்கள் மீட்கப்பட்டு எமது இனம் நிமிர்வு பெறுவதற்கான விடுதலை ஆண்டாய் மலரவேண்டும் என்றும் பிரகடனப்படுத்திக் கொள்ள உறுதிபூண்டுள்ளனர்.
இப்புனித நாளில், நல்லளிப்பு என்ற கைவிசேட நடைமுறையைத் தொடங்கி உறவுகளுக்கு உயிர் கொடுக்கும் உயரிய பணியையும் உயிர் மெய்யாக்கியுள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே.
தமிழ்நாடு அரசும் "தை முதல் நாள்தான் தமிழரின் புத்தாண்டுத் நாள் என்பதற்கு, இந்த ஆண்டு சட்ட வடிவம் கொடுத்துள்ளது." எனவே தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என பிரகடனப்படுத்துவோம்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. புத்தாண்டில் உலகம் வாழ் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும். இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும்.
தைப்புத்தாண்டில் தமிழீழ மக்கள் வாழ்வில் அல்லல்கள் நீங்கி துன்பங்கள் தொலைந்து, கோடி இன்பங்கள் குவிந்து, இளங்காலை பூத்தெழும் கீழ்வானத்தே, தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும். அமைதி நிறைந்து புதுவாழ்வு பூக்கட்டும். அந்த நம்பிக்கையுடன் தமிழீழ மண்ணின் பொங்கற் பால் பொங்கட்டும்.
தமிழர் புத்தாண்டாம் பொங்கல் திருநாளில் உலகு எல்லாம் சிதறிய தமிழர் எல்லாம் தமிழீழ மண்ணை மீட்பதற்காய ஒன்றாய் இணைந்திடுவோம்.
தமிழர் நாம் விரிந்து கிடக்கும் பூமியில் பரந்து கிடந்தாலும் தாய் மொழியாம் தமிழைக் காத்து, வளர்த்தெடுத்து தமிழர் கலை பண்பாட்டு விழுமியங்களோடு வாழ்ந்து தமிழனாய் தரணி எங்கும் தலைநிமிர்ந்து வாழ எங்கள் சுதந்திர பொங்கல் திருநாளை வரவேற்போம்.

நெருப்பாறுகள் கடந்து அக்கினிக்குஞ்சுகளாய் எமது தாயக விடுதலை நோக்கிய இலட்சியப் பாதையில் அளப்பரிய தியாகங்கள், வெற்றிகள், சாதனைகள், பெரும் சரித்திரங்களைப் படைத்தும் சமகாலத்தில் தோல்விகள் இழப்புக்கள், துன்பங்கள், துரோகங்கள் போன்றவற்றைக் கடந்தும் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழியில் வீராவேசத்துடன் தனது சுதந்திர தாயகம் நோக்கி அசையா உறுதியுடன் தமிழீழ பிறப்பிற்காய் போர்க்களத்தில் போராடி வருகின்றனர். இருப்பினும் இன்று எமது விடுதலைப் பயணம் ஒரு சூட்சுமம் நிறைந்த ஏமாற்றம் கொண்ட நிச்சயமற்ற காலமாய் பரிணமித்து நிற்பது போன்ற மாயைத்தோற்றத்தை உலகிற்கு வெளிக்காட்டி நிற்கின்றது.
தமிழீழ நிலப்பரப்பின் பரவலான வீழ்ச்சியும், சிங்கள இனவெறி அரசின் தமிழ் இன அழிப்பின் உச்ச போர் முனைப்பும் எம்மைச் சூழ்ந்திருக்கும் போர் மேகமும் கொலைவெறி அரசிற்கு கொடிய ஆயுதங்களை கொடுக்கும் உலக நாடுகளின் தமிழர் விரோதப் போக்கும் எமக்கு பெருத்த ஏமாற்றத்தையும் வேதனையையும் தந்து நிற்கின்றது.
நாம் நம்பிக்கை கொண்டிருந்த எமது அண்டை நாடான இந்திய அரசும் எமக்கு நியாயமான தீர்விற்கு வழி வகுக்கும் என நினைத்த மேற்குலகமும் கொன்று ஒழிக்கப்படும் தமிழ் இனத்தின் அவலத்தில் எள்ளளவேனும் அக்கறையில்லாது இருப்பது எமக்கு தாங்கொணா துன்பத்தையும் மனத்தில் ரண வலியையும் ஏற்படுத்துகின்றது.
இந்த தோற்றம் போலியானது நிரந்தரமானது அல்ல என்பதை எமது தலைவன் புரிய வைக்கும் காலமே இனிவரும் காலங்களாய் அமையும்.
முகில் கூட்டம் சூரியனை மறைப்பதால் சூரியன் அழிந்து போய்விட்டதாக அர்த்தமாகாது. இதைப் போல் நமது தாயகத்தை போர் மேகங்கள் மறைத்து நிற்கின்றன. இந்த போர் மேகங்களை கலைத்து நமது சூரியத்தேவன் வெற்றிவாகை சூடி சுதந்திர ஒளி வீசுவான். இது திண்ணம்.
இந்த நிலையை உணர்ந்து தமிழனின் சுதந்திர வாழ்விற்கு தமிழனே உறுதுணை என்ற யதார்த்தத்தை உணர்ந்து களத்திலும் புலத்திலும் தமிழர் தம் பரப்பு எல்லாம் ஒருங்கிணைத்து சுதந்திர பொங்கலுக்காய் எழுச்சி கொள்வோம்.
உறுதியின் உறைவிடமாய் இலட்சியத்தின் இருப்பிடமாய் சுதந்திர வேட்கையின் சூரியனாய் எத்துயர் வந்தபோதும் தமிழ் மானத்துடன் மண் காக்கும் பெரும் காவலனாய்த் துணையிருக்கும் வரலாறு தந்த வல்லமை எம்பெரும் தலைவன் பிரபாகரனே.
அந்தத் தலைவனின் எண்ணங்களை செயலாக்கும் தளபதிகளே, தலைவரினதும், தளபதிகளினதும் வழி நடத்தலை ஏற்று நின்றும் துணிந்து சென்றும் களமாடி வெற்றி தரும் போராளிகளே, எமது சுதந்திர, தேசிய விடுதலை இயக்கத்தை வளர்த்து, கட்டிக்காத்து அதற்காக பெரும் சுமைகளையும் ஆறாத துன்பங்களையும் தாங்கி நிற்கும் எம் போற்றுதற்குரிய தமிழீழ மக்களே. ஒன்றுபட்ட சக்தியாய் ஒருமித்த பலம் கொண்டு போர்க்கருவியோடு, ஏற்கருவி தாங்கி பொங்கிடுவீர் சுதந்திர பொங்கல் தனை.
எம் இரத்த உறவான மக்களே!
நாங்கள் இருக்கின்றோம் பலம் கொடுப்பதற்கு, உரம் கொடுப்பதற்கு ஏன் எம் உயிரையும் கொடுப்பதற்கு நம்பிக்கையோடு வெற்றிக்களமாடுங்கள்.
உலகமே எதிர்த்து நின்றாலும் எம் உரிமையை மறுத்து நின்றாலும் எம் சுந்திர வாழ்வை தடுத்து நின்றாலும் ஏன் ஆயுதங்களை அள்ளிக்கொடுத்து எம்மை அழித்தாலும் சிங்களமே திரண்டு வந்து எம்மை கொன்றொழித்தாலும் எம் விடுதலைத் தாகம் தணியாது. தமிழர் நாம் உறுதி குலையோம். நாம் எழுச்சி கொண்டு எம் தாயகத்தை நிச்சயம் வென்றெடுப்போம். எங்கள் சுதந்திரத்தை, எங்கள் தாயக விடுதலையை நிர்ணயிக்கும் ஒரே சக்தியாகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் தமிழீழ மக்களாகிய நாங்கள் ஒன்றிணைவோம்.
ஆயிரம் ஆயிரம் சுமைகளைத் தாங்கி தமது இன்னுயிர்களை கூட காணிக்கையாக்கி தலைவன் வழி நின்று தடைகளையும் இடர்களையும் தகர்த்தெறியும் எம் உயிரிலும் மேலான களப் போராளிகளே, தமிழீழ மக்களே.
இனிய தைத்திருநாளில் நாம் உமக்கு வாழ்த்துரைக்கும் இத்தருணம் புலம்பெயர் தமிழர் நாம் எமது தாயகத்தில் சுதந்திரக் காற்று நித்தியமாய் வீசும் வரை எமது வானில் எம் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கும் வரை எமது உடல் உழைப்பு வளம் அனைத்தும் அர்ப்பணித்து எமது சுதந்திர தேசம் அங்கீகாரம் பெறும் வரை முழு மூச்சுடன் உழைப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம்.
தமிழர்களே! உலகு எல்லாம் பரந்து கிடக்கும் நாம் பலமாய் இருக்கின்றோம். எமது பலங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து ஒன்றுபட்ட சக்தியாய் உருவெடுக்கும் போது உலகமே எதிர்த்து நின்றாலும் எமது தனிப் பலத்தில் தமிழீழத்தை மீட்டெடுப்போம் என வீட்டுக்கு ஒருவராய் நாட்டுக்காய் எழுவோம்.
ஏழு கடலைத் தாண்டி எட்டுத்திசை எங்கும் கோலோச்சி வாழ்ந்த இனம் வேரறுந்து வாழும் நிலை மாற்றுவோம், வீரியத்தின் விழுதுகளை கோலோச்ச அரியணையில் ஏற்றி நிற்கும்
அமெரிக்க தமிழர்களும் ஐரோப்பியக் கண்டத்தில் அயராது உழைக்கின்ற உறவுகளும்
உலகத்தின் மூலையில் ஒதுங்கிக்கொண்டாலும் அலை கடலை ஆரத்தழுவும் அவுஸ்ரேலியத் தமிழர்களும்
ஆர்ப்பரித்து உறவுக்காய் ஆதரவுக்கரம் தரும் ஆபிரிக்கக்கண்டத் தமிழர்களும் ஆசிய நாட்டின் பெரும் தமிழர் பரம்பரையும் அவனியில் தமிழருக்கு அங்கீகாரம் தமிழீழம் ஒன்றே என்ற முடிவோடு எமது விடுதலையை நாமே வென்றெடுப்போம் என்ற உணர்வோடு விடுதலைத்தீ மூட்டுவோம்.
எமது தொப்புக் கொடியாம் தமிழக உறவுகளே!
நீங்கள் ஆற்றும் தமிழீழ அங்கீகாரத்திற்கான பணியும் தார்மீக ஆதரவும் உதவிகளும் எங்களுக்கு நம்பிக்கை உணர்வுகளைத் தந்து நிற்கின்றது.
இத்தருணத்தில் தமிழீழ மக்கள் சார்பில் உளமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். உங்கள் பணி மேலும் வளர்ந்து உலகத் தமிழர் சக்தியாய் உருவெடுத்து தமிழர்களுக்கான தேசம் மீட்கத் தடைகளைத் தாண்டி கரம் கொடுக்க வேண்டும் என உரிமையுடன் கோரி நிற்கின்றோம்.
தாய் மொழியாம் தமிழை காப்பதற்கும் தமிழர்களின் தாயகத்தை மீட்பதற்கும் உலகத் தமிழர் ஒவ்வொருவரும் காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து உணர்வோடும் உறுதியோடும் பணி செய்து பாரினில் தமிழர் எல்லாம் தலை நிமிர்ந்து வாழ வழி சமைப்போம்.
"எங்கள் சமுதாயம் ஏழாயிரம் ஆண்டு திங்கள்போல் வாழ்ந்து செங்கதிர் போல் ஒளிவீசும் மங்காத போர்க்களத்தும் மாளாத வீரர் படை கங்குல் அகம் என்றும் காலைப் புறம் என்றும் பொங்கி விளையாடிப் புகழ் ஏட்டிற் குடியேறித் தங்கி நிலைத்துத் தழைத்திருக்கும் காட்சிதனைக் கண்காண வந்த கலை வடிவே நித்திலமே! பொங்கற்பால் பொங்கிப் பூவுதிர்ப்பாய் தைப்பாவாய்!"

No comments:

Post a Comment